நாடாளுமன்றம் கூடியது: திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு-மீரா குமார் சபாநாயகராகிறார்
டெல்லி: 15வது லோக்சபா இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் புதிய எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் மாணிக் ராவ் காவிட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
புதன்கிழமை புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும். மீரா குமார் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15வது லோக்சபா தனது செயல்பாட்டைத் தொடங்குகிறது. இன்றும் நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தற்காலிக சபாநாயகர் கேவிட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), அர்ஜூன் சரண் சேத்தி (பிஜூ ஜனதா தளம்), பைரன் சிங் எங்க்டி (காங்கிரஸ்), சுமித்ரா மகாஜன் (பாஜக) ஆகிய 4 மூத்த எம்.பி.க்கள் குழுவை நியமித்துள்ளார்.
முதலில் அவை முன்னவரான பிரணாப் முகர்ஜியும், அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து வருகின்றனர். அழகிரி, ராஜா உட்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்த பின் 3ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். சபாநாயகராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார். ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த தலித் தலைவர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள்தான் மீரா குமார். மத்திய அமைச்சராக இருந்து வரும் அவர் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படுகிறார். இதையடுத்து நேற்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் மீரா. அதன் பின்னர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தலித் பெண்மணி ஒருவர் சபாநாயகர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும் பெண் ஒருவர் இப்பதவியில் அமருவதும் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் சென்ட்ரல் ஹாலில் நடைபெறும். அதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தி புதிய அரசின் திட்டங்களை அறிவிப்பார்.












Click it and Unblock the Notifications