உபியை தொடர்ந்து தமிழகத்துக்கு ராகுல் குறி!
டெல்லி: உ.பி. பிகார் மாநிலங்களில் கிட்டத்தட்ட செத்துக் கிடந்த காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்டியதைத் தொடர்ந்து தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை நிமிர்த்தி உட்கார வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் ராகுல் காந்தி.
அமைச்சர் பதவி தன்னைத் தேடி வந்தபோதும் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் ராகுல் காந்தி. அவரது திட்டமே இப்போது வேறாக உள்ளது. அது காங்கிரஸ் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் பலப்படுத்துவதுதான்.
உ.பி., பிகாரில் தொய்ந்து போய்க் கிடந்த காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் தொடர் பிரசாரங்கள், மேற்கொண்ட உத்திகள், லோக்சபா தேர்தலில் நல்ல அறுவைடையைப் பெற்றுக் கொடுத்துள்ளது, மூத்த காங்கிரஸ் தலைவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.
ஆனால் ராகுல் காந்தி அங்கேயே நின்று விடாமல் தனது வெற்றி பார்முலாவை ஒவ்வொரு மாநிலமாக பரீட்சித்துப் பார்க்க உத்தேசித்துள்ளாராம்.
அவரது அடுத்த டார்கெட் தமிழகம்தானாம். இதுகுறித்து அவர் கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக ஏராளமான இளைஞர்களைச் சேர்த்தேன். பிறகு இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நடத்தினேன். அதன் விளைவு இப்போது காங்கிரஸ் கட்சி அங்கே பலமாகியிருக்கிறது. இளைஞர் காங்கிரஸ் கட்சியில்
நிர்வாகிகளாக இருந்தவர்களையே மக்களவை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக்கினோம். கட்சிக்கு அங்கே சிறப்பான வெற்றி கிடைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம், பிகாரிலும் கட்சியை வலுப்படுத்த இதே உத்தியைக் கடைப்பிடிக்கப் போகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து பல ஆண்டுகளாகிறது. தென்னிந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றால்தான் அகில இந்திய கட்சி என்பதை
நிலைநாட்ட முடியும். தமிழ்நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. எனவே மெத்தனமாக இருக்க முடியாது.
என்னால் ஒரு சமயத்தில் ஒரு வேலையைத்தான் சிறப்பாகச் செய்ய முடியும், ஆறு வேலையை எடுத்துக்கொண்டு ஆறையும் நன்றாகச் செய்ய முடியாது; எல்லா அரசியல் கட்சிகளும் உத்தரப்பிரதேசத்துக்கு ஜாதி, மத உணர்வுகளைத்தான் பரிசாகக் கொடுத்துள்ளன; நான் நல்ல பரிசாகத் தர நினைக்கிறேன். காங்கிரஸ் அங்கு வலுப்பெற வேண்டும். அதற்கான பணியில் நான் மூழ்கியிருக்கிறேன் என்றார் ராகுல்.
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்..
இதற்கிடையே தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸுக்கு அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்த ஆர்வமாக இருக்கும் ராகுல் இதுதொடர்பாக ஜூன் மாதம் தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளார்.