பிகாரில் 3 ரயில்கள் எரிப்பு-நிலையம் சூறை
பாட்னா: பிகாரின் குஸ்ருபூர் பகுதியில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காமல் செல்லும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ரயில்வே நிலையத்தை சூறையடியதோடு மூன்று ரயில்களுக்கு தீவைத்தனர்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 4 தொகுதியில் மட்டும் வென்று படுதோல்வியடைந்தது. இதையடுத்து அவர் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அமைச்சரவையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய கிழக்கு ரயில்வே நிர்வாகம், பிகார் வழியாக செல்லும் சில முக்கிய ரயில்கள் பாட்னாவில் மட்டுமே நின்று செல்லும் என்றும், அதற்கு அருகில் இருக்கும் குஸ்ருபூர் உள்ளிட்ட பகுதிகளில் நிற்காது என்றும் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தது.
இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர். குஸ்ருபூர் ரயில்வே நிலையத்தை சூறையாடினர். மேலும் அந்த ரயில்வே நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர். அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள் தானாபூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் அவர்கள் தானாபூர்-தார்பங்கா இடையே ஓடும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை தீ வைத்து கொளுத்தினர். அதேபோல் தானாபூர்-ராஜ்கிர் இடையே ஓடிய ரயில் ஒன்றின் நான்கு பெட்டிகள் தீக்கிரையாகின. மேலும் தானாபூர்-ஜெய்நகர் இடையே ஓடிய ஒரு ரயிலும் மக்களின் கோபத்துக்கு எரிந்து, சேதமானது.
இதையடுத்து அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயணம் பாதியில் நின்றுள்ளது.
என்னை குற்றம் சாட்டாதீர்-மம்தா...
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,
நான் எந்த நிறுத்தத்திலும் ரயில் நிற்காது என கூறவில்லை. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது போன்ற வதந்திகள் ஏன் பரவுகிறது என்பது தெரியவில்லை. பாட்னாவில் இருக்கும் ரயில்வே அதிகாரிகள் மக்களுக்கு சரியான தகவலை வழங்கவில்லை. இதில் என்னை யாரும் குற்றம்சாட்ட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications