தனிமை 'சிறையில்' பிரபாகரன் பெற்றோர்!
கொழும்பு: பாதுகாப்பு என்ற பெயரில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோரை அவர்களது உறவினர்களுடன் சேர விடாமல் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது இலங்கை ராணுவம்.
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு வவுனியா முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இதை அதிபர் ராஜபக்சேவே அறிவித்தார்.
இவர்களுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவு தலைர் சுப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் உள்ளிட்ட புலிகள் இயக்க தலைவர்களின் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.
தற்போது வயதான தமிழ் மக்களை அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர ராணுவம் அனுமதித்துள்ளது. இதன் மூலம் வயதான பெரியவர்கள், தங்களது குடும்பத்தினரின் நேரடிப் பராமரிப்பில் இருக்க முடியும் என்பதால்.
ஆனால் பிரபாகரனின் பெற்றோரை மட்டும் அவர்களது உறவினர்களுடன் சேர ராணுவம் தடை விதித்துள்ளது. தாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர் என்று இருவரும் கூறியுள்ளதால், பாதுகாப்பு கருதி அவர்களை தனிமையிலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், தாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர் என அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். எனவே அவர்களை பிறரிடமிருந்து பிரித்து வைத்திருக்க விரும்புகிறோம். அவர்களது பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை என்றார்.
வேலுப்பிள்ளைக்கு தற்போது 76 வயதாகிறது. பார்வதி வேலுப்பிள்ளைக்கு 71 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அகதிகள் முகாமில் வேலுப்பிள்ளையம், பார்வதி அம்மாளும் இருப்பது போன்ற ஒரு படத்தையும் இலங்கை அரசுத் தரப்பு வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் சேரில் வேலுப்பிள்ளை அமர்ந்திருக்க, அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறார் பார்வதி அம்மாள்.