சென்னை தீவுத் திடலில் 'பஞ்ஜி ஜம்பிங்'
சென்னை: சாகச விளையாட்டுக்களில் ஒன்றான 'பஞ்ஜி ஜம்பிங்', சென்னைக்கு வந்துள்ளது.
சென்னை தீவுத் தடலில் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ரோகினி நிறுவனம் இணைந்து பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
பனிமழை, பெயின்ட் பால் மற்றும் பல்வேறு உல்லாச விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் பனி மழைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடும் வெயிலில் தவித்து வரும் சென்னை மக்கள் இங்கு வந்து செயற்கை பனிமழையில் நனைந்து குளிர்ந்து திரும்புகின்றனர்.
அதேபோல சாகச விளையாட்டான 'பஞ்ஜி ஜம்பிங்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது மிகவும் பாதுகாப்பான விளையாட்டு, இதில் விளையாட விரும்புபவருக்கு பாதுகாப்பு பெல்ட் கட்டப்படுகிறது. இந்த விளையாட்டு குஷன் ஸ்பிரிங் ஆக்ஷன் கொண்டது. கீழே பாதுகாப்பு வலையும் உள்ளது. எனவே பாதுகாப்பான முறையில் இந்த “பஞ்ஜி ஜம்ப்" விளையாடலாம்.
சில இளைஞர்கள் கயிற்றில் பிடித்து தொங்கியபடி கரணமும் அடித்து சாகசம் செய்கிறார்கள். இளம் வயது பெண்கள், ஆண்கள் ஆகியோர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
3 நிமிடம் விளையாட கட்டணம் ரூ.50 ஆகும். 7 வயது குழந்தைகள் முதல் 65 கிலோ எடையுள்ளவர்கள் வரை இதில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் பெங்களூரில் இப்படித்தான் பஞ்ஜி ஜம்ப் விளையாட்டின்போது பாதுகாப்பு பெல்ட் அறுந்து விழுந்து சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எனவே தீவுத் திடலில் நடைபெறும் விளையாட்டில், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்டவை தரமானதாக, சரியானதாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது உறுதி செய்து கொள்வது அவசியம்.