நெல்லையில் அரிவாளை காட்டி ஏட்டு பைக் 'லபக்'!
நெல்லை: நெல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டை அரிவாளால் மிரட்டி மர்ம கும்பல் ஒன்று அவரது பைக்கை கொள்ளையடித்து சென்றது.
பாளை டிவிஎஸ் நகர் பகுதியில் பெருமாள்புரம் குற்றபிரிவு ஏட்டுகள் ஜெயக்குமார், சுதாகர் ஆகியோர் நேற்று இரவு 7 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 வாலிபர்கள் ஒரு பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தனர். பைக்கின் பதிவு எண் மதுரை மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்ததால் சந்தேகமடைந்த ஏட்டுகள் இருவரும் அவர்களிடம் சென்று வண்டிக்கு உரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென அரிவாளை காட்டி ஏட்டுகள் இருவரையும் மிரட்டினர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த பைக்கை போட்டு விட்டு ஏட்டு ஜெயக்குமார் பைக்கை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து போலீசார் தப்பி சென்றவர்கள் போட்டுவிட்டு போன பைக்கில் இருந்த கைரேகைகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பதால், இவர்களை நம்பி எப்படி இரவு வெளியில் செல்வது என பொது மக்கள் அங்கலாயித்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications