ஆஸியில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்
குடிபோதையில் இருந்த ஆஸ்திரேலியர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.
மெல்போர்ன் நகரின் சேப்பல் தெருவிலிருந்து குடிபோதையில் ஒரு ஆஸ்திரேலியரை தனது டாக்சியில் ஏற்றிக் கொண்டு சவாரி கிளம்பினார் 35 வயதாகும் அந்த இந்திய டிரைவர். பிளாக்பர்ன் என்ற இடத்திற்கு டாக்சி போய்க் கொண்டிருந்தபோது, இந்திய டிரைவரை தாக்கியுள்ளார் அந்த ஆஸ்திரேலிய குடிகாரர்.
இதுகுறித்து அந்த டாக்சி டிரைவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. பிளாக்பர்ன் பகுதியைச் சென்றடைந்ததும், அந்த நபர் தன்னை ரிங்வுட் என்ற இடத்திற்கு செல்லுமாறு பணித்தார். அப்போது எனது டாக்சி டயர் பங்சர் ஆகி விட்டது.
அவரிடம் இதை சொல்ல முயன்றபோது, என்னை தாறுமாறாக திட்டியபடி அடித்தார் அந்த ஆஸ்திரேலியர். முகத்தில் சரமாரியாக குத்தினார்.
இந்த தாக்குதலில் எனது முகம், கால், கைகளில் காயம் ஏற்பட்டு விட்டது. இரண்டு பற்களும் உடைந்து விட்டன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் மயக்கமடைந்து விட்டேன்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் என்னை மீட்டனர். எனது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆல்பிரட் மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றனர். இன்று காலைதான் நான் வீடு திரும்பினேன் என்றார்.
இந்திய டாக்சி டிரைவரைத் தாக்கிய குடிகார ஆஸ்திரேலியரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இது இனவெறி தாக்குதல் போலத் தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட இந்திய டிரைவர் தெரிவித்துள்ளார்.