இது அனைவருக்கும் உதவும் அரசு-கருணாநிதி
சென்னை: அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே தமிழக அரசு உதவி செய்வதைப் போலவும், மற்றவர் நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதாகவோ அரசு அலுவலர் அல்லாதோர் நினைத்து விடக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட 1.3 லட்சம் பேருக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க இந்த அரசு தான் முடிவு செய்தது. சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 90,000 பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலமுறை ஊதிய விகிதத்தை, 2006 முதல் இந்த அரசு தான் உயர்த்தி வழங்கியது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை, முதன் முதலாக திமுக அரசு தான் 1989ம் ஆண்டு மூன்றாவது முறையாக பொறுப்புக்கு வந்த போது கொண்டு வந்தது.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்பதால், ஆண்டுக்கு ரூ. 5,155 கோடி கூடுதல் தொடர் செலவு ஏற்படும். ஊதிய உயர்வை முன் தேதியிட்டு வழங்குவதால், தமிழக அரசுக்கு ரூ. 11,093 கோடி செலவாகும்.
உலகெங்கும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக அரசின் வருவாய் குறையக் கூடுமென எதிர்பார்க்கும் நிலையில், அரசு தன் அலுவலர்களுக்காக இந்த ஊதிய உயர்வைக் கொடுக்க காரணம், அவர்களும் இந்த அரசின் ஓர் அங்கம் தான் என்பதை நன்றாக புரிந்து கொண்டிருப்பதால் தான்.
அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே உதவி செய்வதைப் போலவும், மற்றவர் நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதாக அரசு அலுவலர் அல்லாதோர் நினைத்து விடக்கூடாது.
1998-99ல் உணவு மானியமாக ரூ. 200 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு வந்தது. தற்போது, கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று 20 கிலோ வரை வழங்கும் திட்டம், ரூ. 50க்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு ரூ. 2,800 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ. 16,494 கோடியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக செலவிட்டுள்ளது இந்த அரசு.
எனவே, தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நல் வாழ்வில் எந்த அளவிற்கு அக்கறையோடு செயல்படுகிறதோ, அதைப் போலவே அரசு அலுவலர்களின் நலனிலும் அக்கறையோடு பணியாற்றுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி
இன்று அமைச்சரவைக் கூட்டம்:
இந் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கோட்டையில் கூடியது. ஸ்டாலின் துணை முதல்வரான பின் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நாளை பிறந்த நாள்:
முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் நாளை (3ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
நாளை காலை 7 மணிக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் கருணாநிதி 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
மாலை 6 மணிக்கு சென்னை தீவுத் திடலில் மன்றோ சிலை அருகே நடக்கும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இது தவிர திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications