இந்தியா வரும் யுஎஸ் வெளியுறவு இணையமைச்சர்
வாஷிங்டன்: இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வரும் 10ம் தேதி இந்தியா வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதமாக இருவரும் பேசி கொண்டதாகவும் அதன் விளைவாக தற்போது அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் இந்திய வருகிறார்.
வரும் 10ம் தேதி இந்தியா வரும் பர்ன்ஸ் 13ம் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு செல்வார் எனவும், மூத்த அரசு அதிகாரிகளையும், சில தனியார் நிறுவனத்தின் தலைவர்களையும் சந்திப்பார் என தெரிகிறது.
மத்தியில் புதிய அரசு அமைந்த பின்னர் இந்தியா வரும் முதல் பெரிய வெளிநாட்டு அமைச்சர் இவர் தான் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரம், மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக வெளியுறவு செயலர் சிவ சங்கர மேனனையும் சந்தித்து பேசுவார் எனவும் தெரிகிறது.
ஜூலையில் ஹிலாரி வருகை...
இவரை தொடர்ந்து வரும் ஜூலையி்ல் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு வருவார் என கூறப்படுகிறது.