இந்திய பிபிஓ துறைக்கு வீழ்ச்சி இருக்காது!-நியூயார்க் டைம்ஸ்
நொய்டா: இந்தியாவின் பிபிஓ துறையில் இப்போதைக்கு மந்த நிலை காணப்படடுவது உண்மைதான் என்றாலும் விரைவில் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.
இதுகுறித்து அந்த நாளிதழின் இணையதளம் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அமெரிக்க நிறுவன வேலை வாய்ப்புகள் அமரிக்காவுக்கே என அறிவித்தது அமெரிக்கா.
இதனால் செலவுக் குறைப்பு, அமெரிக்க பணியாளர் நியமனத்துக்கு முன்னுரிமை என அமெரிக்க நிறுவனங்கள் மாறுவது போல் தெரிந்தாலும், விரைவிலேயே மீண்டும் இந்தியப் பணியாளர்களைத் தேடி வரத் தொடங்கியுள்ளன அமெரிக்க நிறுவனங்கள்.
இதனால் 6 மாதங்களுக்கு முன்பு டல்லடித்த இந்திய பிபிஓக்கள் இப்போது மீண்டும் பணிகளைத் தொடங்கி வருவதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. "ஆனால் இந்த முறை முன்பு போல வேகமான வளர்ச்சி இருக்காது. ஆனால் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சி நிச்சயம்", என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்கோர் கேபிடல் குரூப்பின் தலைவரும் முதன்மை செயல் அலுவலருமான பிராண்டன் பிளாக் கூறுகையில், அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் உள்ள தங்கள் பணியாளர் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் மிக நன்கு படித்த இளைஞர்கள், திறமையாளர்கள் அதிகம். குறைந்த செலவில் மிகுந்த திறமைசாலிகளை நமக்காகப் பணியில் அமர்த்திக் கொள்ள முடியும். ஆனால் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை. எல்லாவற்றும் இந்தியாவில் அவுட்சோர்ஸிங் செய்து கொள்ள முடியும். இந்த காரணம் போதும், எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய..." என்கிறார்.
இவரைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும், அமெரிக்க அரசின் வற்புறுத்தலையும் மீறி இந்தியர்களை அதிகமாக பணியமர்த்துகின்றன, அதிக முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
உதாரணம் பாருங்ககள்: கம்ப்யூட்டர் துறையில் முதல் நிலையில் உள்ள எச்பி (Hewlett-Packard) நிறுவனம் சில மாதங்களுக்கு முன் 6400 பணியாளர்களை நீக்கியது. அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களே. ஆனால் அதே நிறுவனம் இப்போது இந்தியாவின் எட்டு பெரிய நகரங்களில் எச்பி சாப்ட்வேர் யுனிவர்ஸிட்டியை அமைக்கவிருப்பதாகவும், இதன்மூலம் சாப்ட்வேர் எஞ்சினியர்களை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.
நியூஜெர்ஸியில் உள்ள ஹனிவெல் இன்டர்நேஷனல் நிறுவனம், 50 மில்லியன் டாலர் செலவில் பெங்களூரில் புதிய ஆராய்ச்சி மையம் துவங்கவிருப்பதாகவும், இதில் 3000 பேர் பணிபுரிவார்கள் என்றும் கூறியுள்ளது.
உலகில் மற்ற நாடுகளில் இப்போதுள்ள உழைக்கும் மக்களுக்கு வயதாகிவிட்டது என்பதே உண்மை. ஆனால் இந்தியாவில் புதுப்புது திறமைகள், இளைஞர்கள் வந்தவண்ணம் உள்ளது மிக வசதியாக உள்ளது என்கிறார் டேவிட் எம் கோட்.
வரும் 2010-க்குள் இந்தியாவில் அவுட் சோர்ஸிங் மூலம் மட்டுமே 50 பில்லியன் டாலர் அளவு இந்தியா வருமானம் ஈட்டலாம் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தங்கள் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு 40 சதவிகிதம் வரை வளர்ச்சி காணும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது இன்போஸிஸ்.












Click it and Unblock the Notifications