9 மாதங்களுக்குப் பின் 15000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!
மும்பை: கடந்த ஒன்பது மாதங்களில் முதல்முறையாக 15000 புள்ளிகளைக் கடந்தது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ். ஆனால் பிற்பகலுக்குப் பின் மீண்டும் மைனஸில் பயணிக்கத் துவங்கிவிட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், பொருளாதாரம் விரைவில் தனது பழைய அந்தஸ்துக்கு திரும்பி விடும் என்ற நம்பிக்கையில் பங்கு வர்த்தகம் சூடுபிடித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரம், இந்தியப் பொருளாதாரத்தில் லேசான தடுமாற்றம் தெரிந்தாலும் அஸ்திவாரத்தையே ஆட்டிவிட்டு, இந்தியாவில் சம்பாதித்த பெரும் தொகையுடன் தங்கள் நாட்டுக்கு மூட்டை முடிச்சைக் கட்டுக்கொண்டு ஓடுபவர்களும் இதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் என்பதால் இவர்களை மட்டும் நம்பி பங்குச் சந்தையை உச்சநிலைக்கு கொண்டு போகவேண்டாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய பிறகு 168 புள்ளிகள் உயர்ந்ததால், சாதனை அளவான 15000 புள்ளிகளை சென்செக்ஸ் கடந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு சென்செக்ஸ் 15000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல்முறை.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 47 புள்ளிகள் உயர்ந்தது.
ஆனால் பிற்பகலுக்குப் பிறகு மீண்டும வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை நிலவியதால் 88 புள்ளிகள் இறங்குமுகமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளான நிக்கி, ஹாங்க்செங், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸிலும் இன்று ஏறுமுகமான நிலையே காணப்பட்டது.