மத்திய நிதிக் கமிஷன் அதிகாரிகள் தமிழகம் வருகை
சென்னை: மத்திய நிதி கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் இன்று தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை அவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்திக்கின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் 280வது ஷரத்தின் கீழ் அமைக்கப்பட்டது தான் மத்திய நிதி கமிஷன். முதல் நிதி கமிஷன் 1951ல் நியோகி தலைமையில் செயல்பட்டது. இவை நாட்டின் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்களை தீட்டி வருகிறது.
2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 13வது நிதி கமிஷன் விஜய் கெல்கர் தலைமையில் தற்போது 2010 முதல் 2015ம் ஆண்டுக்குட்பட்ட நிதி செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
சிவில் கோர்ட்டுக்கு இணையான அதிகாரம் கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அலுவலகத்துக்கும் சென்று தங்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்று கொள்ளும் அதிகாரம் படைத்தது. மேலும், நிதி கமிஷனை சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இதையடுத்து அவர்கள் தற்போது தமிழகம் வரஇருக்கின்றனர். தற்போது இந்த நிதி கமிஷனில் தலைவரை தவிர்த்து டாக்டர் இந்திரா ராஜாராமன், பேராசிரியர் அதுல் சர்மா, டாக்டர் சஞ்சீவ் மிஸ்ரா என மூன்று உறுப்பினர்களும், பி.கே.சதுர்வேதி என்ற நான்காவது பகுதி நேர உறுப்பினர் ஒருவரும் உள்ளனர்.
இவர்களில் இருவர் இன்று மாலை சென்னை வருகின்றனர். அவர்கள் நாளை காலை முதல்வர் கருணாநிதியை சந்திக்கின்றனர். பின்னர் நிதித்துறை அதிகாரிகள், வணிகத் துறையினர் மற்றும் சில தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கின்றனர்.
மேலும், வருமான வரி மற்றும் மத்திய கலால் வரி போன்றவற்றில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய பங்கு குறித்தும் அவர்கள் ஆலோசிக்க இருக்கின்றனர். ஜூன் 5ம் தேதி அவர்கள் சென்னையில் இருந்து திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
பிரதமர் தமிழகம் வருகிறார்:
இந் நிலையில் திருச்சி பி.எச்.இ.எல். நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் தமிழகம் வரவுள்ளார். ஜூன் 3ம் வாரத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications