இந்தியாவில் 4 பேருக்கு ஸ்வைன் ப்ளு-பரிசோதனையில் உறுதி

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகை மிரட்டி வருகிறது. மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பழி வாங்கியது. இந்நிலையில் இதை தடுக்க அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய அரசு அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவை நிறுத்தி சோதனையிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சென்றுவிட்டு ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஒருவர் லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்தார். விமான நிலையத்தில் சோதனை செய்த போது அவருக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான அறிகுறி எதுவுமில்லை.
இந்நிலையில் அவர் கடந்த 1ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருப்பதாக கூறி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான சோதனைகள் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் டெல்லி மற்றும் கொச்சின் விமான நிலையங்களிலும் தலா ஒரு பயணிக்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் சோதனை முடிவுகள் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில கோயம்புத்தூர் வந்திறங்கிய 11 பேரின் சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பட்டன. அவர்களில் 2 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சிவபிரகாசம் கூறுகையில்,
அமெரிக்காவின் போஸ்டனில் இருந்து கோயம்புத்தூர் வந்த செரின் என்ற 34 வயது பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் மகளுக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் என மூன்று பேரின் சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவர்கள் மூவரும் அட்லாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்கள். அவர்களில் மகளுக்கு மட்டும் ஸ்வைன் ப்ளூ அறிகுறி தெரிகிறது. இருந்தாலும் பெற்றோர்களும் அவருக்கு அருகில் இருந்திருப்பதால் அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
சிகி்ச்சை அளித்த டாக்டருக்கும் ஸ்வைன் ப்ளூ?:
இந்நிலையில் கோயம்புத்தூரில் ஸ்வைன் ப்ளூ அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிக்சை அளித்து வந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் அதற்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த அந்த பயிற்சி டாக்டரின் சாம்பிள்களும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவர்கள் தவிர இந்தியாவில் இன்னொருவருக்கும் ஸ்வான் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அவரது பெயர் விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications