தமிழகத்தில் வாழும் அகதிகளை ஏற்போம்-இலங்கை
கொழும்பு: தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என இலங்கை செய்தித் துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
முதல் கட்டமாக வடக்கு பகுதி முகாம்களில் தங்கியிருக்கும் 2 லட்சத்து 72 ஆயிரம் தமிழர்களை நிரந்தமராக அவர்களது சொந்த வீட்டுக்கு திருப்பியனுப்ப திட்டமிட்டு்ள்ளோம்.
இதற்காக ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்சே தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை வேகமாக செய்து முடிக்கும்.
இன்னும் 6 மாதத்துக்குள் வடக்கில் இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் மீண்டும் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. அவர்களும் எங்கள் நாட்டு மக்கள் தான். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம்.
வடக்கில் தமிழ் மக்களின் துயர துடைக்க இலங்கை அரசு 26 சமுதாய வளர்ச்சி மையங்களை அமைத்து வருகிறது. போதுமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட 15 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 6,740 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.