எம்பிபிஎஸ் படிப்பில் சேர கடும் போட்டி-ஒரே நாளில் 6000 விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: தமிழகத்தி்ல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட முதல் நாளிலேயே 6,000 விண்ணப்பங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதனால் விண்ணப்பங்கள் வாங்க வந்த மேலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவர்கள் ஏமாற்றதுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தர்மபுரி உள்ளிட்ட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 251 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும்,
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். (பல் மருத்துவம்) இடங்களுக்கும் நேற்று விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது.
ஆனால், முதல் நாளிலேயே மாநிலம் முழுவதும் 6,000 விண்ணப்பங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மட்டும் 2,500 பேருக்கு மேல் விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் நாளில் 3,500 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு விண்ணப்பம் வினியோகிக்கப்பட்ட 15 நாட்களிலும் சேர்த்தே ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 250 பேர் மட்டுமே விண்ணப்பங்களை வாங்கினர்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அந்தக் கல்லூரிக்கு முதல் நாளில் 100 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டன. ஆனால், இவை ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஐடி துறையில் ஏற்பட்டு மந்தம் காரணமாக இந்த ஆண்டு என்ஜினியரிங் படிப்பை விட எம்பிபிஎஸ் படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பங்கள் இந்த அளவுக்கு வேகமாக விற்பனையாகியுள்ளன.
இதை மனதில் கொண்டு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2,000 விண்ணப்பங்கள் கூடுதலாகவே (மொத்தம் 18,000) அச்சடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பகுதி பகுதியாக அவற்றை விற்பனை செய்ய திட்டமிடப்படது. இப்போது ஒரே நாளில் எல்லா விண்ணப்பங்களும் விற்றுவிட்டதால் மாநிலத்தில் உள்ள அனைத்து 15 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் கூடுதல் விண்ணப்பங்கள் அனுப்பப்ப்டடுள்ளன.
இதனால் இன்று முதல் விண்ணப்பங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் டாக்டர் ஷீலா கிரேஷ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களா பெறவும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் கடைசி நாள் ஜூன் 17 ஆகும். ஜூன் 28ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 6ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கும்.
இந்த விண்ணப்பங்களை தமிழக நலத்துறையின் இணையத் தளமான www.tnhealth.org மற்றும் தமிழக அரசின் இணையமான www.tn.gov.in ஆகியவற்றிலும் டெளன்லோட் செய்து கொள்ளலாம்.