உயிரே போனாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன்-வைகோ
சென்னை: இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான தனது பேச்சுக்கு உயிரே போனாலும் முதல்வர் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, இந்தத் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தவரே முதல்வர் கருணாநிதிதான். அவருக்குத் தெரிந்து, அவரது ஒப்புதல் பெற்றுத்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றார்.
இதையடுத்து வைகோ தனது பேச்சுக்கு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந் நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய வைகோ,
கடந்த 5 ஆண்டு காலங்களில் சிவகாசி தொகுதியில் பணியாற்றிய உழைப்புக்கும், சாதி-மதம் வேறுபாடு இன்றி செய்த சேவைக்கும் அதிக வாக்குகள் கிடைக்காவிட்டாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று ஓட்டுப்பதிவின்போது கூறினேன்.
காரணம் வெள்ளம்போல பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் வாக்கு வித்தியாசம் ஏற்படலாம் என்று கூறினேன்.
வாக்காளர்கள் தேடி போய் பணம் பெறவில்லை. வீடு தேடி பணம் கொடுக்கப்பட்டது. சில வீடுகளில் பணம் வீசப்பட்டது. பணம் பெற்று கொண்டதால் வாக்காளர்கள் இடையே மனப் போராட்டம் ஏற்பட்டது. இதனால் தான் தோற்றோம்.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இன்றைய தோல்வி நாளைய வெற்றிபடி.
இயக்குனர் பாரதிராஜா, தமிழ் உணர்வால் ஈழத் தமிழர்கள் மீதுள்ள பற்றால் குரல் கொடுத்தார். ஈழத் தமிழர்கள் காப்பாற்றபடவேண்டும் என்பதற்காக திரைப்பட இயக்குனர்கள் குரல் கொடுத்தார்கள். அதற்காக பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது.
இதைக் கண்டித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வரை விமர்சனம் செய்து பேசினேன். அதற்கு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வக்கீல் நோட்டீசில் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதே நோட்டீசில் கடைசி வரியில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வைகோ எந்த காரணத்தை கொண்டும் சொந்த கருத்தை, பேசிய கருத்தை திரும்ப பெற்றதில்லை. பேசிய வார்த்தையை மறுத்ததும் இல்லை. உயிரே போனாலும் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்.
தோல்வியை சந்தித்தாலும் மக்கள் மன்றத்தில் குரல் கொடுத்து மக்களுக்காக பணியை தொடருவேன். இந்திய அரசு உதவியோடு, இன்று இலங்கையில் ஈழத்தமிழர்கள் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
20,000 பேர் உடல் தனியாக, தலைதனியாக சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் வரும்போது வருவார்.
ஈழத் தமிழர்களுக்காக நான் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்றார்.
பதில் நோட்டீஸ்:
இந் நிலையில் அரசு அனுப்பிய நோட்டீசுக்கு வைகோவின் வழக்கறிஞர்கள் தேவதாஸ், நன்மாறன், பிரியகுமார் ஆகியோர் பதில் அனுப்பியுள்ளனர். அதில்,
கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் வைகோ. தேர்தலில் வெற்றி, தோல்வி ஆகியவை மதிமுகவின் தமிழ் ஈழக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
எனவே, மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து உள்நோக்கத்துடன் முதல்வர் குறித்து வைகோ இவ்வாறு பேசியதாக நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது.
பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டுவர்கள்தான். மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவர்.
வைகோவின் பேச்சு இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள பேச்சுரிமைக்கு உட்பட்டுள்ளதால், மன்னிப்பு கேட்க முடியாது.
இந்தப் பதிலைத் தொடர்ந்து அவதூறு வழக்குத் தொடர்ந்தால், வழக்குச் செலவை முதல்வர் கருணாநிதி தான் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications