புதுச்சேரி ஆளுநராகிறார் பரத்வாஜ்?
டெல்லி: புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் பதவியேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவிகள் தரப்படவில்லை.
இதனால் இவர்களுக்கு கவர்னர் பதவிகள் தரப்படும் என்று கூறப்படுகிறது.
முதல்கட்டமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், புதுவை, திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கோவிந்சிங் குர்ஜார் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்கேயே மரணமடைந்தார். இதனால் புதுவை மாநில கவர்னர் பொறுப்பை தமிழக ஆளுநர் பர்னாலா தான் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந் நிலையில் புதுவை ஆளுநராக முன்னாள் சட்ட அமைச்சரான பரத்வாஜ் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போல மத்திய உள்துறைச் செயலாளராக உள்ள மதுக்கர் குப்தாவின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவர் திரிபுரா மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பட்டீல் ஆகியோருக்கு பெரிய மாநிலங்களின் கவர்னர் பதவிகள் தரப்படலாம். தமிழக ஆளுநராக உள்ள பர்னாலாவின் பதவி்க் காலமும் விரைவில் முடிவதால் சிஸ்ராம் ஓலா அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்காள ஆளுநராக உள்ல கோபாலகிருஷ்ண காந்தியின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்க ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிபாரிசு செய்து வருகிறார்.