அகதிகள் முகாம்களில் 13,000 தமிழர்கள் மாயம்: படுகொலையானார்களா?
கொழும்பு: வன்னிப் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை என ஐ.நா. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலகம், இந்த காணாமல் போன தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. வட்டாரத் தகவல்கள் கூறுகையில், 13 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போயிருப்பது குறித்து சிங்கள அதிகாரிகள் மறைத்து வருகிறார்கள்.
காணாமல் போயுள்ளவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், சிறார்கள்தான். கணிசமானவர்கள் பெண்களும் ஆவர்.
மே 30ம் தேதிய நிலவரப்படி 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 தமிழ் மக்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களில் 13,130 பேரை தற்போது காணவில்லை. மே 27ம் தேதியன்றுதான் இதுகுறித்து தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்கள். விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவர்களை ராணுவம் கொன்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களையும், இளம் பெண்களையும் ராணுவம் விசாரணை என்ற பெயரில் கற்பழிப்புக்குள்ளாக்கியும், தொடர் சித்திரவதைக்குள்ளாக்கியும் வருவதாக புகார்கள் உள்ளன.
ஐ.நா. குழுக்களுக்கோ, பிற மனித உரிமை குழுக்களுக்கோ முகாம்களைப் பார்வையிட விடாமல் இலங்கை அரசு தடுத்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இரும்புத் திரை போட்டுத் தடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.












Click it and Unblock the Notifications