தமிழர் நிவாரண கப்பலை சிறை பிடித்த இலங்கை

வன்னிப் பகுதியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் அகதிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்காமல், உதவக் காத்திருக்கும் உலக அமைப்புகளையும் அனுமதிக்காமல் கொடூரமாக நடந்து வருகிறது இலங்கை அரசு.
இந்த நிலையில் வணங்காமண் என்ற பெயரில், பல்வேறு உலக நாடுகளில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக சேகரித்து அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
இந்தக் கப்பல், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கப்பல் எனவும், முல்லைத்தீவுக்குள் பிரவேசிக்க முயன்றபோது கைது செய்யபப்ட்டதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.
கேப்டன் அலி என்ப் பெயருடைய சிரிய நாட்டுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில், 884 மெட்ரிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து 160 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட இக் கப்பலில் சிரிய நாட்டு மாலுமியும், ஐஸ்லாந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 சிப்பந்திகளும் இருப்பதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தக் கப்பல் பிரான்சிலிருந்து கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications