ஆஸி.யில் மீண்டும் இந்திய மாணவர் மீது தாக்குதல்
மெல்போர்ன்: இனி இனவெறித் தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதி அளித்தும் கூட இந்தியர்கள் மீதான தாக்குதல் மெல்போர்ன் நகரில் தலைவிரித்தாடுகிறது,. நேற்று மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் இனவெறியர்களால் தாக்கப்பட்ட 10வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங் (20). மெல்போர்ன் நகரில் உள்ள கேப்ஸ் நிர்வாகவியல் கழகத்தில், படித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று மெக்டொனால்ட் உணவகப் பகுதியில் தான் பகுதி நேரமாக வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அவர் போய்க் கொண்டிருந்தார்.
அதன் பிறகு நடந்தது குறித்து சிங் கூறுகையில், நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென ஒரு கும்பல் என்னை வழிமறித்தது. அவர்களில் ஒருவன் எனது மொபைல் போனை பறித்துக் கொண்டான். அதை என்னிடம் தருமாறு நான் கோரியபோது, எனது முகத்தை அவன் குத்திவிட்டான்.
கோபமடைந்த நான் பதிலுக்கு அவனது முகத்தில் குத்தினேன். இதையடுத்து அவனுடன் இருந்த நான்கு பேரும் சேர்ந்து என்னை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவர்களில் ஒருவன் தனது கத்தியால் என்னைக் குத்த முயன்றான். நான் சுதாரித்து விலகியதால் நான் வைத்திருந்த பேக்கில் கத்தி பட்டது. நான் தப்பித்தேன். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளேன் என்றார் சிங்.
இதுவரை பத்து இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளதால் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இவர்களில் கடுமையாக தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த ஷ்ராவன் குமார் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.