கொலை வழக்கில் கைதான தேசியவாத காங். எம்.பி.க்கு சிபிஐ காவல்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பவன் ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் கைது செய்யபப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சருமான பதம்சிங் பாட்டீல் ஜூன் 14ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவன் ராஜே நிம்பல்கர், கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கலம்போலி என்ற இடத்தில், இரண்டு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நிம்பல்கரின் உறவினரான பாட்டீலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
உஸ்மானாபாத் தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங் எம்.பி ஆவார் பாட்டீல்.
கைது செய்யப்பட்ட பாட்டீல் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். அதை விசாரித்த நீதிபதி ஜூன் 14ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து பாட்டீலை விசாரிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த வாரம்தான் இந்த கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, நிம்பல்கர் தவிர, மாக்சேசே விருது பெற்ற பிரபல சமூக சேவகரான அன்னா ஹசாரேவையும் கொல்ல தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் போராட்டம் வெடித்தது...
பாட்டீல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
பல பகுதிகளில் கடைகளை மூடக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தியதால் கடைகள் மூடப்பட்டன. சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்டம் கடமையைச் செய்யும் .. பவார்
இதற்கிடையே பாட்டீல் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications