பொதிகை எக்ஸ்பிரஸ்-பயணிகளை குழப்பும் தாம்பரம் ரயில் நிலையம்
நெல்லை: சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் தென்காசி வரை மட்டுமே செல்வதாக அறிவித்து தாம்பரம் ரயில் நிலையம் மக்களை குழப்பி வருகிறது. இந்த தவறான தகவலால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2003, ஜூன் 1ம் தேதி முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னை முதல் ராஜபாளையம் வரையில் பிராட்கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தென்காசி வரை நீட்டிக்கப்பட்டது.
கடந்த 2008 பிப்ரவரி 7ம் தேதி முதல் அந்த ரயில் செங்கோட்டை வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது அது தினமும் ஒரு முறை செங்கோட்டையிலிருந்து, சென்னை எழும்பூருக்கும், சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்தான் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வரையுள்ள மக்களின் கதாநாயகன்.
இந்த ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு 16 மாதங்களை கடந்த நிலையிலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தென்காசி வரை மட்டுமே செல்வதாக தவறாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த தவறான அறிவிப்பினால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவனிக்குமா தென்னக ரயில்வே...












Click it and Unblock the Notifications