ரூ. 90 கோடி ஊழல்-பெரும் சிக்கலில் பினரயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் அமைச்சரும், சிபிஎம் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முதல்வர் அச்சுதானந்தனின் பரம வைரியுமான பினரயி விஜயனை ரூ. 90 கோடி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க கேரள மாநில ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் சிபிஎம் வட்டாரம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
1998ம் ஆண்டு ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்தார் விஜயன். அப்போது, பன்னியனார், செங்குளம், பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மூன்று நீர் மின் திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. இதுதொடர்பான ஒப்பந்தம் கனடாவைச் சேர்ந்த எஸ்என்எசி லாவலின் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதை வழங்கியதில் மிகப் பெரும் அளவில் முறைகேடும், ஊழலும் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. விஜயன் ரூ. 90 கோடி அளவுக்கு சுருட்டி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணையில், விஜயன் பெருமளவில் முறைகேடு செய்திருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து விஜயனை வழக்கில் 9வது குற்றவாளியாக சேர்க்க சிபிஐ முடிவு செய்தது.
ஆனால் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சிபிஎம் கூறி வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் விஜயனையும் சேர்த்து அவரையும் விசாரிக்க அனுமதி கோரி முதல்வர் அச்சுதானந்தனிடம் விண்ணப்பித்தது சிபிஐ.
இந்த விண்ணப்பத்தை ஆளுநர் கவாய்க்கு அனுப்பி வைத்தார் அச்சுதானந்தன். ஆளுநர் இந்த வழக்கைப் பரிசீலித்து, தற்போது விஜயனையும் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தரவை அவர் சென்னையில் உள்ள சிபிஐ கூடுதல் எஸ்.பி. பிரேம்குமாரை திருவனந்தபுரத்திற்கு வரவழைத்து அளித்தார். அதை அவர் உடனடியாக சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜயனை விரைவில் சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.
சிபிஎம் கருப்பு தினம் அனுசரிப்பு
விஜயனை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளதை சிபிஎம் விமர்சித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் நேற்றைய தினத்தை அது கருப்பு தினமாக அனுசரித்தது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் முன்னணி அமைப்பினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆளுநரைக் கண்டித்து பேரணிகள் நடத்தினர்.
திருவனந்தபுரத்தில் அந்த அமைப்பினர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்று கவாயின் கொடும்பாவியைக் கொளுத்தினர். அவர்களை கவாடியார் சந்திப்புப் பகுதியில் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
அதேசமயம், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆளுநரின் முடிவை வரவேற்று ஊர்வலம் சென்று கொண்டாடினர்.
முதல் பொலிட்பீரோ உறுப்பினர்...
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக தற்போது இருந்து வரும் பினரயி விஜயன், ஊழல் வழக்கில் சிக்கி விசாரணைக்கு உள்ளாகவிருக்கும் முதல் சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் என்ற 'பெருமையை' பெறுகிறார்.
65 வயதாகும் விஜயனுக்கும், அச்சுதானந்தனுக்கும் இடையே கடும் பனிப் போர் நடைபெற்று வந்தபோதிலும், விஜயனை சிபிஐ விசாரிப்பதற்கு அச்சுதானந்தன் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இருப்பினும் சிபிஐ மற்றும் எதிர்க்கட்சிகளின் நெருக்குதலைத் தொடர்ந்து இதுதொடர்பான கோரிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் அச்சுதானந்தன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருக்கிறார் விஜயன். பொலிட்பீரோ உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஊழல் வழக்கில் சிக்கியதில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாகப் பெற்று விட்டார் விஜயன். இதனால் சிபிஎம் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்த மாதத்தில் நடைபெறவுள்ள பொலிட்பீரோ மற்றும் மத்திய குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி விவாதிக்கவுள்ளது.
அதேசமயம், விஜயனுக்கு எதிரான இந்த வழக்கு தொடர்பாக அச்சுதானந்தன் தரப்பு உள்ளூர மகிழ்ச்சி அடைந்துள்ளதாம். இந்த வழக்கின் மூலம் அச்சுதானந்தனின் கை மேலோங்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
கேரளா கவர்னருக்கு கொலை மிரட்டல்:
இந் நிலையில் கேரள கவர்னர் ஆர்.எஸ். கவாய்க்கு தொலைபேசியில் மிரட்டல் கொலை வந்துள்ளது. வளைகுடா நாட்டிலிருந்து இந்த மிரட்டல் வந்தது.
பினராயி விஜயனுக்கு எதிராக வழக்கு தொடர சி.பி.ஐக்கு கவாய் அனுமதி தொடுத்துள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளது.