இலங்கை: விரைவில் அனைத்து கட்சி கூட்டம்?
ராஜ்யசபாவில் கடந்த 2 நாட்களாக இலங்கைப் பிரச்சினை குறித்து பல்வேறு கட்சி எம்.பிக்களும் உணர்ச்சி மயமாக பேசி வருகின்றனர்.
இன்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு பேசுகையில், இலங்கையிலிருந்து வெளி வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன. அங்கு இனப்படுகொலைக்கு சற்றும் குறைவில்லாமல் படுகொலை நடந்து வருகிறது.
சர்வதேச சமுதாயம் ஈழத் தமிழ் மக்களைக் காக்கத் தவறி விட்டது. பிரதமர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றார்.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், சிபிஐ உருப்பினர் ராஜா, சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் சில இடதுசாரி எம்.பிக்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இந்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது, தார்மீக உரிமை உள்ளது என்று இவர்கள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே. குரியன், சந்தோஷ் பகோர்டியா ஆகியோரும் இந்த பிரச்சினையில் தங்களை இணைத்துக் கொண்டு பேசினர். இலங்கையில் அப்பாவி மக்களைக் காக்க இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும் என வலியுறுத்தினர்.