எம்பிபிஎஸ்-இதுவரை 14000 விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முதல் 5 நாட்களிலேயே 14,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தர்மபுரி உள்ளிட்ட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்பிபிஎஸ் இடங்களுக்கும்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 251 எம்பிபிஎஸ் இடங்களுக்கும்,
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் (பல் மருத்துவம்) இடங்களுக்கும் உள்ளன.
இந்த இடங்களில் சேர கடந்த ஆண்டு மொத்தம் 12,732 விண்ணப்பங்களே மாணவர்களால் வாங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு முதல் 5 நாட்களிலேயே 14,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டுவிட்டன. இன்னும் 8 நாட்கள் விண்ணப்பங்கள் விற்கப்படவுள்ளன. இதனால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 20,000த்தைத் தாண்டிவிடும் என்று தெரிகிறது.
விண்ணப்பங்களைப் பெறவும் சமர்ப்பிக்கவும் கடைசி நாள் வரும் ஜூன் 17ம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வுக் குழுவுக்கு இதுவரை மொத்தம் 1,500 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் அதிக மாணவர்கள் 200க்கு 200 வாங்கியுள்ளனர். அதேபோல மருத்துவத்துக்கான ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணுக்குரிய முக்கியப் பாடங்களான உயிரியல், வேதியியல் ஆகியவற்றில் அதிக மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ்சி்ல் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிஇ படிப்பில் சேர மொத்தம் 1.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications