கள் இறக்க அனுமதி கோரி கருணாநிதியிடம் சரத்குமார் மனு
சென்னை: கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதியை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் மனு கொடுத்தார்.
அவரது இல்லத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்த சரத்குமார், கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.
சரத்குமார் வழங்கிய மனுவில்,
கள் இறக்க அனுமதிப்பது குறித்து விசாரித்து ஆலோசனை அளிக்க முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
கள் இறக்குதல் விவசாயம் சார்ந்த தொழில், விவசாயிகளுக்கும், மரம் ஏறும் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வருவாய் ஈட்டித் தரக்கூடிய தொழில். கள் உணவு வகையைச் சார்ந்தது என விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கள் இறக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் முன் அனுமதி வழங்கி, வருவாய்த்துறை மூலம் வரிசை எண் வழங்கலாம். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு அரசு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயித்து உரிமம் வழங்கலாம்.
கள் விற்பனையை இறக்கும் இடங்களிலேயே அனுமதிக்கலாம். அல்லது பாட்டில், டின்களில் அடைத்து டாஸ்மாக் கடைகள் மூலம் விற்கலாம்.
நமது அண்டை மாநிலங்களில் அரசே கள் விற்பனையை அனுமதித்திருக்கிறது. அரசுக்கு செலவு வைக்காத, வருவாய் ஈட்டித் தருகிற, லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுத்துகிற கள் விற்பனைக்கு அனுமதி அளித்து அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,
கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதல்-அமைச்சரிடம் வழங்கியிருக்கிறேன். சிவசுப்பிரமணியம் குழுவிடமும் மனு அளிக்கும்படி முதல்வர் கூறியிருக்கிறார். அதன்படி அந்த குழுவிடமும் மனு அளிக்க இருக்கிறோம்.
அந்த குழுவின் அறிக்கை வெளிவரும் வரை ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாங்கள் 5-ந் தேதி சேலத்தில் நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. குழுவின் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
முதல்வருடன் அரசியல் குறித்துப் பேசினீர்களா என்ற கேள்விக்கு, அரசியல் எதுவும் பேசவில்லை, அதற்கான தருணமும் இப்போது இல்லை. அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தேன் என்றார் சரத்.
மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டியா..
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டும் என சக நடிகர், நடிகையர் வற்புறுத்துவதாகவும், இதுகுறித்து தான் முடிவெடுக்கவில்லை என்றும், மனு தாக்கலின்போதுதான் அதுகுறித்து தெரியும் என்றும் சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications