மழை இல்லை-கேரளா, தமிழகத்தில் ஏலக்காய் உற்பத்தி கடும் வீழ்ச்சி

கேரளாவில் இந்த ஆண்டு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. சில இடங்களில் நன்றாக மழை பெய்கிறது. சில இடங்களில் போதிய மழை இல்லாமல் வரண்டு கிடக்கிறது.
இந்நிலையில் ஏலக்காய் அதிகம் விளையும் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனா, குலமவு, செருதோனி உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மழை போதுமான அளவுக்கு இல்லை. ஆனால் அதே நேரத்தில் வெயில் கடுமையாக அடிக்கிறது என ஏலக்காய் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே நிலைதான் தமிழகத்தில் உள்ள ஏலக்காய் விளைச்சல் பகுதிகளிலும் நிலவுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் நல்ல மழை பெய்ய வேண்டும். அப்போது தான் விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். முதலுக்கு மோசமில்லாமல் போகும். இல்லையென்றால் இந்த ஆண்டு ஏலக்காய் உற்பத்தி சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துவிடும் என கூறுகின்றனர்.
மேலும், தற்போதைய வானிலை சூழ்நிலைகளை பார்த்தால் அப்பகுதியில் மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஏலக்காய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக கிலோ ரூ. 500க்கு விற்கப்படும் ஏலக்காய்கள் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 650 முதல் 700 வரை விற்கப்படுகிறது.
மேலும், சந்தையில் ஏலக்காய்க்கு தற்போது நல்ல தேவை ஏற்பட்டுள்ள நிலையில் விளைச்சல் குறைந்தால் விலை இன்னும் அதகிரிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஏலக்காய் வளர்ப்போர் சங்க தலைவர் கேஎம் மிக்கேல் கூறுகையில், இந்த ஆண்டு அறுவடை மூன்று அல்லது நான்கு வாரம் தாமதமாகும். ஆகஸ்ட் மாதத்தில் தான் ஆரம்பமாகும். ஏலக்காய்கள் செப்டம்பர் மாதம் தான் விற்பனைக்கு வரும்.
ஏலக்காய் ஆண்டு ஒன்றுக்கு 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்படும். ஆனால் இம்முறை போதிய மழை இல்லாத காரணத்தாலும், கடுமையான வெயில் காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications