12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்
ஷில்லாங்: இந்திய விமானப்படை விமானம் ஒன்று நடுவானில் திடீரென மாயமாகி விட்டது. அதில் 12 பேர் இருந்தனர். விமானம் மலையில் மோதியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று அஸ்ஸாம் மாநிலம் மோகன்பாரி என்ற இடத்தில் உள்ள விமான தளத்திலிருந்து கிளம்பியது. அப்போது அதில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்தில் இறங்கியது. அங்கு மேலும் 6 பேரை ஏற்றிக் கொண்ட ஜோர்ஹாட் கிளம்பியது.
அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து வி்மானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விமானம் வந்த பகுதி அடர்ந்த காடுகள் அடங்கியதாகும். எனவ காட்டுக்குள் விமானம் விழுந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் தேடுதல் முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.