விருதுநகர் அருகே 2 தலித் சிறார்கள் படுகொலை
விருதுநகர்: விருதுநகர் அருகே 2 பள்ளிக்கூடச் சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த சிறுவர்களைக் கொலை செய்து விட்டனர். இருவரும் தலித் வகுப்பினர் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரியைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கம்மநாயக்கன்பட்டி தலையாரி ஆவார். இவருக்கு அந்தோணி ராஜ் என்கிற ராஜா என்ற 14 வயது மகன் இருந்தார். இவன் அம்மாபட்டியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
பீட்டர் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் புஷ்பராஜ்.
புகைப்பட ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருடைய மகன் சிமியோன் (12). இவனும் ராஜா படித்து வந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்று படித்து விட்டு இரவு 7 மணி அளவில் இரு சிறுவர்களும் வீடு திரும்பினர்.
தினசரி இரவு சிறிது நேரம் இருவரும் விளையாடப் போவது வழக்கம். அதேபோல அன்றும் இரவு 8 மணியளவில் விளையாடக் கிளம்பினர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில், கிராமத்திற்கு வெளியே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் இரு சிறுவர்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
சிறுவர்களின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. தலையிலும் ரத்தக் காயம் உள்ளது. சிறார்கள் இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கன்னிசேரிக்குப் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த எஸ்.பி. செந்தில்குமார் மக்களை அமைதிப்படுத்தினார்.