குழந்தைகளை கடத்திய 10 பேர் கைது-3 குழந்தைகள் மீட்பு
நெல்லை: தமிழகத்தில் குழந்தைகளை கடத்தி பின்னர் அனாதை இல்லம் என்ற பெயரில் விற்பனை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஐஜி கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது,
திருச்சி, பெரம்பலூர் மற்றும் ராஜாபாளையத்தில் கடந்த 6 மாதத்தில் 7 பச்சிளங்குழந்தைகளை கடத்தி பணத்திற்காக ஒரு கும்பல் விற்பனை செய்துள்ளது. இதில் தொடர்புடைய வள்ளியூரை சேர்ந்த அன்பு சிறுவர் இல்ல உரிமையாளர் ராஜன் உள்பட 3 பேரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர்.
இதனையறிந்த கன்னியாகுமரி மாவட்டம் கீழ்சந்தையடியை சேர்ந்த மனோகரன் இரு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
எனவே வள்ளியூர் அன்பு சிறுவர் இல்லத்தில் இருந்து ஒரு பச்சிளங்குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும், அதற்காக ரூ.45 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தத்தெடுத்தற்கான ஆவணங்களை அந்த இல்லத்தில் கேட்டபோது தபாலில் அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி அவர்கள் ஒரு தபாலில் போலியாக குழந்தை பிறப்பு சான்றிதழ் அனுப்பியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனிபிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி, இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கொடி, வேல்முருகன்., விஜயகுமார், ஜெயக்குமார், நாகராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அனாதை இல்லம் என்ற பெயரில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வருபவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.
பின்னர் அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளை கடத்திய புரோக்கர்களான தென்காசியை சேர்ந்த கோட்டையம்மாள், சாம்பவர் வடகரை பொன்னுதாய், கடையநல்லூர் அருணாசலவடிவு, எஸ்தர், தென்காசி ஐயப்பன் மனைவி வேல்மயில், உசிலம்பட்டியை சேர்ந்த பூச்சியம்மாள், கோடாங்கி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்திலிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications