காவல் அதிகாரிகளை மிரட்டியதாக ஜெ., வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு டிஸ்மிஸ்
மதுரை: காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
மதுரை அன்புநகரை சேர்ந்த பாண்டித்துரை என்ற வக்கீல், மதுரை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 7.10.2006 அன்று மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, போலீசார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நான் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் அதிகாரிகளை சும்மா விட மாட்டேன், இதை போலீசாருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன் என்றும் பேசி உள்ளார்.
இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது.
அதே போன்று நெல்லையில் 9.10.2006 அன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, போலீசாரை மிரட்டும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஜூடிசியல் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாண்டித்துரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார்.
இருப்பினும் இந்த வழக்கில் தொடர்ந்து அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்று நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், தமிழ்செல்வன், காடுபட்டி கருணாகரன் ஆகியோர் ஆஜரானார்கள். வைகோ சார்பில் மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், ம.தி.மு.க வக்கீல் சுப்பாராஜ் ஆஜராகினர்.
மனுதாரர் தரப்பில் தொடர்ந்து 3-வது முறையாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications