ஆகா, தங்கம்!-ஓடிய மக்கள்.. போக்குவரத்து பாதி்ப்பு!
சென்னை: சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் மஞ்சள் நிற உலோகப் பவுடர் கொட்டிக் கிடந்ததைப் பார்த்து, தங்கத் துகள்கள் என கருதி மக்கள் திரண்டு வந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலைப் பகுதி எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும் முக்கிய சாலையாகும்.
இந்த சாலையில் கனரக வாகனங்களின் ஓட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில், அங்குள்ள பாலத்தில் மஞ்சள் நிறத்தில் உலோகப் பவுடர் கொட்டிக் கிடந்தது.
இது தங்கத் துகள்கள் என தகவல் பரவியது. ஓசின்னா உயிரைக் கொடுக்கும் மக்களாச்சே நம்மவர்கள், விடுவார்களா. நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து விட்டனர்.
அந்த சாலை முழுவதும் கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு வலை வீசித் தேடி மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட துகளை தேடித் தேடி சேகரித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.
மக்கள் எடுத்துச் செல்வது தங்கத் துகள்கள் இல்லை என்றும் அது மஞ்சள் நிறத்திலான உலோகத் துகள் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications