பாஜகவில் பெரும் சிக்கல் - யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா
டெல்லி: பாஜக துணை தலைவர் யஷ்வந்த் சின்ஹா தனது துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவி்த்துள்ளார்.
சின்ஹாவின் இந்த விலகலால் பாஜகவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பாஜகவில் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற பாஜக நிர்வாகிகள் நியமனம் அங்கு பெரும் புயலைக் கிளப்பி விட்டது. மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், ராஜ்யசபா துணைத் தலைவராக அருண் ஜேட்லியை நியமித்ததற்கு பகிரங்க ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
அதேபோல மக்களவை துணைத் தலைவர் பதவியை சுஷ்மா சுவராஜுக்கு கொடுத்ததையும் ஜஸ்வந்த் சிங் பகிரமாக விமர்சித்திருந்தார்.
இவரது கருத்துக்கு மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக துணை தலைவர் யஷ்வந்த் சின்ஹா தனது துணைத் தலைவர் பதவி, செயற்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது அனைத்தையும் விரிவாக தெரிவித்து அவர் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
சின்ஹாவின் விலகலால் பாஜகவில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications