ரஷ்யாவில் மன்மோகன்-சர்தாரி சந்திப்பு: மும்பை குறித்து பேச்சு?
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி ரஷ்யா செலகிறார். அங்கு அவர் 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்து பேசுகிறார். மும்பை பயங்கரவாத சம்பவத்துக்கு இரு நாட்டு தலைவர்களும் நேரில் பேசி கொள்ளப் போவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் கூட்டு அமைப்பின் ஆண்டு கூட்டம் அடுத்த வாரம் ரஷ்யாவின் எகடாரின்பர்க் நகரில் நடக்கிறது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பார்வையாளராக கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்க பிரதமர் வரும் 15ம் தேதி ரஷ்யா செல்கிறார். அதே போல் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் கலந்து கொள்ள வருகிறார்.
இவர்கள் இருவரும் வரும் 16ம் தேதி சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர மேனனும் உறுதி செய்துள்ளார். ஆனால், மும்பை தாக்குதல் குறித்து பேசப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
ரஷ்யாவில் மன்மோகனும், சர்தாரியும் ஒரே சமயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நிச்சயம் கைகுலுக்கி கொள்வார்கள்.
கூட்டம் நீண்ட நேரம் நடப்பதால், சர்தாரியுடன் பேசுவதற்கு குறைந்த நேரமே கிடைக்கும். அந்த நேரத்தில் எவ்வளவு நேரம் பேசுவார்கள், என்ன பேசுவார்கள் என்பதை இப்போது கூற முடியாது.
பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் இந்தியாவிலும், இந்திய ஹை கமிஷ்னர் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் அறிக்கையை கவனித்து வருகிறது.
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான சூழ்நிலைகளை பாகி்ஸ்தான் உருவாக்க வேண்டும்.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கவேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதுவரை அவர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்த தயாராக இல்லை என்றார் சிவசங்கர மேனன்.
ஷாங்காய் கூட்டு அமைப்பு கூட்டத்தை தொடர்ந்து 'பிரிக்' அமைப்பு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். பிரிக் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டத்தில் உலக பொருளாதாரம் குறித்து பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் வரும் 17ம் தேதி இந்தியா திரும்புகிறார்.