அதிமுகவைப் போல இளைஞர் அணி, இளம் பெண்கள் அணியை உருவாக்கும் பாமக
கடலூர்: குடிகாரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் பாமகவில் இருக்கக் கூடாது. அவர்களுக்கு பாமகவில் இடம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் சந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
வன்னியர் சங்க மாநில தலைவர் குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் திட்டமிட்டு தோற்கடிக்கப் பட்டோம். எதிர் கட்சிகள் தில்லு, முல்லு செய்து தேர்தலில் நமது வெற்றியை பறித்தனர். இதனால் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்து தேர்தலில் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியை உருவாக்க வேண்டும்.
நாம் தொடாத பிரச்சினை இல்லை..
பொது மக்களின் நலன்கருதி நாம் தொடாத பிரச்சினைகள் எதுவும் இல்லை. இது தி.மு.க.வினருக்கு பிடிக்க வில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.
கடந்த 10 ஆண்டுகளாக பா.ம.க. எந்த கூட்டணியுடன் இருந்தாலும் வெற்றி என்ற நிலை இருந்தது. இதனை முறியடிக்க மின்னணு இயந்திரத்தில் சூழ்ச்சியும், பண பலமும், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
தேர்தல் என்றால் பணம் தான் என்ற நிலையை மாற்ற வேண்டும். தேர்தலில் பணம் செலவு செய்ய நம்மிடம் ஆட்களும் இல்லை. பணமும் இல்லை. ஆனால் எதிர்கட்சியினர் ஊழல் செய்து அதிகளவில் தேர்தலின் போது செலவு செய்கிறார்கள்.
இளைஞர் அணி - இளம் பெண்கள் அணி..
எதிர்காலத்தில் பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு ஊர் தோறும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும். குறிப்பாக 15 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் 20 பேரை வைத்து ஒரு பாட்டாளி இளைஞரணி அமைக்க வேண்டும். இதே போல பாட்டாளி இளம் பெண்கள் அணி உருவாக்க வேண்டும்.
எதற்காக செயல்படுகிறோம் என்ற கருத்துகளை மக்களுக்கு புரியும்படி செயல்பட வேண்டும்.
அடுத்த மாதத்திற்குள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட உள்ளனர். வருகிற ஆகஸ்டு மாதத்தில் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
குடித்தால் புகார் அனுப்புங்கள்...
குடிகாரர்கள் நமது கட்சியில் இருக்க கூடாது. பொறுப்பாளர்கள் கட்டப்பஞ்சாயத்து, குடித்தால் புகார் அனுப்பலாம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.