நடிகர் தியாகுவின் தம்பி கடத்தல்?-மனைவி புகார்
கோவை: பிரபல திரைப்பட நடிகர் தியாகுவின் தம்பி ராஜாராமனை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக அவரது மனைவி கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் தியாகு. இவரது தம்பி ராஜாராமன் (42). கோயம்புத்தூர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் ராஜாராமன் பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ராஜாராமன் மனைவி கற்பகம், மகள் காருண்யா ஆகியோர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.
காரில் இருந்து, மனைவி, மகள் இறங்கியதும், காரை பார்க்கிங் செய்ய ராஜாராமன் சென்றார். அப்போது, மின்னல் வேகத்தில் மற்றொரு காரில் வந்தவர்கள், ராஜாராமை கூட்டி சென்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாராமனின் மனைவி கற்பகம், கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு கோவை போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ராஜாராமின் நெருங்கிய உறவினர் ஒருவர் கும்பகோணம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை விசாரிப்பதற்காகவே, கோவை வந்த கும்பகோணம் போலீசார் ராஜாராமை அழைத்துச் சென்றதாக போலீஸ் வட்டாரம் கூறுகிறது.