கொழும்பில் உலவும் 26 'மனித வெடிகுண்டுகள்'!
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 26 பேர் இன்னும் கொழும்பில் பதுங்கியிருப்பதாகவும், உரிய உத்தரவுகள் வராததால் அவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்னியில் போர் முற்றுவதற்கு முன்பே தற்கொலைப் படையினரை கொழும்பு மற்றும் தென் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவ அனுப்பி விட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின.
இதனால் போர் முடிந்த பிறகும் கூட அரசு அவசர நிலையை தளர்த்தாமல் உள்ளது. மேலும் கொழும்பில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொழும்பு நகருக்குள் இன்னும் 26 தற்கொலைப் படையினர் நடமாடி வருவதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.
இவர்களுக்கு உரிய உத்தரவுகள் இன்னும் வரவில்லை. உத்தரவை பிறப்பிக்கும் நபர் யார் என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இவர்கள் உள்ளனர் என்று தெரிகிறது.
இவர்கள் மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தேடுதல் வேட்டையில் சிலர் சிக்கியுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.