மகளிர் மசோதா எதிர்ப்பாளர்களுக்கு ஓட்டு போடாதீர்-கனிமொழி
சென்னை: பெண்கள் மசோதாவை எதிர்ப்பவர்களுக்கு பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது. அப்போது தான் அந்த மசோதா நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவும், யுஎன்டிஇஎப் நிறுவனமும் இணைந்து 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தி வருகிறது. நேற்று இந்த கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசினார். பெண்கள் விழிப்புணர்வு பாடல் சிடி ஒன்றையும் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் இது போன்ற சிக்கல்களுக்கு அவர்களின் தயக்கமும், தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதும் தான் காரணம். பெண்கள் இந்த தடைகளை தாண்டி வெளியே வர வேண்டும். நம்பிக்கை இருந்தால் மட்டும் பெண்களால் சாதிக்க முடியாது. ஜெயிக்க முடியாது.
தனக்கு சமமாக திறமை கொண்ட பெண்களை எந்த ஆணும் மதிப்பதில்லை. தன்னைவிட கூடுதல் திறமை கொண்ட பெண்களை மட்டுமே அவர்கள் தமக்கு சமமாக கருதுகிறார்கள். ஆண்களுக்கு சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றால் பெண்கள் தங்கள் வேலைகளில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். அனைத்து பெண்களும் கட்சி வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
பெண்கள் மசோதாவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட கூடாது என உறுதியாக சொல்ல வேண்டும். அப்போது தான் இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேறும்.
தந்தையிடம் கேளுங்கள்...
பத்திர்கையாளர்கள் என்னிடம் உங்களால் எப்படி அரசியலிலும், குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட முடிகிறது என கேட்கின்றனர். இதற்கு என்னுடைய பதில். முதலில் இந்த கேள்வியை என்னுடைய தந்தை மற்றும் அண்ணனிடும் கேட்டுவாருங்கள் என்பேன்.
அரசியலில் இருக்கும் ஒரு ஆண் தனது குழந்தை என்ன படிக்கிறார் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றால் பெருமையாக நினைக்கிறார்கள். அதே பதிலை ஒரு பெண் சொன்னால் ஏற்றுக்கொள்வதில்லை என்றார் கனிமொழி.