ராமேஸ்வரம், குமரியில் கடல் சீற்றம்-திருவள்ளுவர் சிலை வளாகத்திற்குள் நீர் புகுந்தது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்றும், இன்றும் கடல்சீற்றம் கடுமையாக காணப்பட்டது. 30 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், பல கிராமங்களுக்குள் நீர் புகுந்து தீவு போல் காட்சியளித்தன.
இதேபோல ராமேஸ்வரத்திலும் இன்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின்னர் தற்போது அதிக உயரத்திலான அலைகள் கன்னியாகுமரியை மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கொல்லங்கோடு, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை உள்ளிட்ட இடங்களில் நேற்று 25 அடி முதல் 30 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மேலும் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, கடலில் கலக்கும் இரயுமன்துறை கிராமத்திலும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மக்கள் மேட்டு பகுதியில் சென்று தங்கியுள்ளனர். கடல்சீற்றம் தொடர்ந்து அதிகரித்தை அடுத்து கடற்கரைக்கு அருகிலிருந்த சுமார் 25 வீடுகள் கடலுக்குள் சென்றுவிட்டன.
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதனால் கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் வெகு தூரத்தில் நின்று கொண்டு கடலின் ஆர்ப்பரி்ப்பை ரசித்தனர்.
திருவள்ளுவர் சிலை பகுதியிலும் ராட்சத அலைகள் எழும்பின. அங்குள்ள தரைதளத்துக்குள் நீர் புகுந்தது. இதனால் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்றும் குமரி கடல் பகுதியில் கடுமையான சீற்றம் காணப்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலும் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பகுதியில் கடும் சூறாவளிக் காற்று காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. அதை மிதித்த ஒரு மீனவர் உயிரிழந்தார்.