கல்யாண மண்டபங்களுக்கு கடும் கிராக்கி!!
சென்னை: நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே, நல்ல பெண் கிடைக்க வேண்டுமே என்ற கவலை போய், முதலில் நல்ல கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் சென்னை பெற்றோர்கள் மூழ்கிப் போயுள்ளனர்.
இதென்ன கலாட்டா என்கிறீர்களா... மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு முன்பே கல்யாண மண்டபத்தைத் தேடும் நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்யாண மண்டபங்களுக்கு அவ்வளவு கிராக்கி உள்ளது. ஒரு வருடத்திற்கு கல்யாண மண்டபங்கள் புக் ஆகி விட்டனவாம். இதனால் கல்யாணத்தை நிச்சயம் செய்தவர்கள் மண்டபம் கிடைக்காமல் அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் விரோதி ஆண்டில் மொத்தமே 45 முகூர்த்த நாட்கள்தான் உள்ளன. ஆனால் கல்யாணங்களோ நூற்றுக்கணக்கில் உள்ளன. எனவே மண்டபங்கள் கிடைக்காமல் மக்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மண்டபங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் முன்பதிவு முடிந்து விட்டதாம். மண்டபம் கிடைக்காததால் பல மணமக்கள் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் 3 மாதத்திற்கு முன்புதான் மண்டபத்தை புக் செய்யக் கிளம்புவார்கள். ஆனால் இப்போதோ ஒரு ஆண்டுக்கு முன்பே புக் செய்து விடுகிறார்கள். அல்லது மண்டபத்தை புக் செய்த பின்னர் கல்யாணத் தேதியை முடிவு செய்கிறார்கள்.
மண்டபம் கிடைக்காத நிலை ஒரு பக்கம் என்றால் தாறுமாறாக ஏறிக் கிடக்கும் வாடகையும் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
சாதாரண மண்டபம் முதல் மிகப் பெரிய மண்டபங்கள் வரை வாடகை ஏகமாக உள்ளது.
எழும்பூர், தியாகராய நகர், அடையாறு, வடபழனி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரபலமான திருமண மண்டபங்கள் அனைத்தும் இந்த ஆண்டுக்கான முகூர்த்த தினங்கள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
மண்டபம் கிடைக்காமல் அவதிப்படும் சாதாரண மக்கள், வேறு வழியில்லாமல் கோவில்களில் வைத்து கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டு போய் விடுகிறார்கள்.
கோவிலில் கல்யாணம், அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு என சிம்பிளாகவும் முடிந்து விடுகிறது.
வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகியுள்ள நிலையில் இப்போது கல்யாணத்திற்கு மண்டபமும் கிடைப்பது கடும் சிக்கலாகியிருப்பதால் சென்னை மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.