வவுனியா மருத்துவமனையில் உடல் உறுப்புகளை இழந்த நிலையி்ல 20,000 தமிழர்கள்
வவுனியா: விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் நடந்த கோரப் போரில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்த நிலையில் 20 ஆயிரம் தமிழ் மக்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள செய்தி:
இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரில் 20 ஆயிரம் மக்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் படையினரின் எறிகணை வீச்சுக்களினாலேயே பெருமளவான மக்கள் உயிரிழந்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் எமது செய்தியாளர்களிடம் ரகசியமாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் ஒரு வார காலமாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.
ஆனால் இலங்கை அரசுத் தரப்பில் இந்த செய்தியை தொடர்ந்து மறுத்து வந்தனர். ஒரு லட்சம் மக்கள் தங்கியிருந்த பகுதி மீது இலங்கை அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் தினசரி ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து இறுதியாக தப்பிவந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏறிகணைத் தாக்குதல்களை தாம் நிகழ்த்தவில்லை என இலங்கை அரசு தெரிவித்த போதும் அங்கு தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கண்ணால் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு மேற்கொண்ட வெற்றி கொண்டாட்டங்கள் மிகவும் வேதனைக்குரியது என முகாமில் பணியாற்றும் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வேட்கைகளை பிரதிநிதித்துவப்படுத்த தற்போது எவரும் இல்லை, தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியற்ற எதிர்காலமே எஞ்சியுள்ளது. அவர்கள் அந்நியர்களின் ஆட்சியில் வாழ்வது போல வாழ்ந்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் தனிநாட்டு கோரிக்கைக்கான போராட்டம் வெளியில் இருந்து தொடர்ந்து நடத்தப்படும் என விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்கான போர் ராணுவ நடவடிக்கை மூலம் மிகவும் கொடூரமாக நசுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல ஆயிரம் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவரும் வவுனியா மருத்துவமனைக்குள் பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கும் அனுமதிகள் வழங்கப்படுவதில்லை.
எனினும் எமது செய்தியாளர்கள் ரகசியமாக சிறிய ஒளிப்படக்கருவியை அங்கு கொண்டு சென்று மருத்துவர் ஒருவரை நேர்காணல் கண்டுள்ளனர்.
மருத்துவமனையில் உடல் உறுப்புகளை இழந்த 20 ஆயிரம் மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் எறிகணைத் தாக்குதல்களில் உறுப்புகளை இழந்தவர்கள் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முகாம்களின் தரம் மிகவும் குறைவானது, காயமடைந்துள்ள மக்கள் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்தால் கொல்லப்படுவோம் என அரசு தமக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications