விதிகளை மீறும் ஆந்திரா-கேரளா: துரைமுருகன்

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் டெல்லி பாபு, காங்கிரஸ் உறுப்பினர் ராமன், திமுக உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளி்க்கையில்,
ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சிறு சிறு தடுப்பணைகள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள் ஆகியவற்றை அமைப்பதற்கு கடந்த ஆண்டு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் 103 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 88 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்தப் பணிகளுக்காக மேலும் ரூ. 200 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதில் பொதுப் பணித்துறைக்கு ரூ. 100 கோடியும், வேளாண்துறை, வனத்துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தெரிவித்தால், தேவையின் அடிப்படையில் அந்தப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.
இரு மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் அணைகள் கட்டுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. மேல் பகுதி மாநிலத்தில் அணை கட்டுவது என்றால், கீழ்பகுதியில் உள்ள மாநிலத்துடன் கலந்துபேசி அவர்களுடைய ஒப்புதலோடுதான் பணிகள் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக சட்டமும் விதிகளும் இருந்தாலும் இதை எந்த மாநிலமும் மதிப்பது இல்லை.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தமிழகத்திடம் அனுமதி பெறவில்லை வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று செயல்படுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு ஏற்க மறுத்து வருகிறது. இது வேதனையான விஷயம் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications