சென்னை மூலம் நாட்டில் பரவும் சீன போலி மருந்து
சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் ஆப்ரிக்காவில் போலி மருந்து விற்பனை செய்த சீனா, சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கும் போலி மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)' என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதை இந்தியாவே செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தன.
ஆனால் சமீபத்தில் சீனா தான் தனது தயாரிப்புகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என முத்திரை குத்தி அனுப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அரசு, சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
தென் கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சீனா தான் இந்தியாவுக்கு அதிகளவில் மருந்து ஏற்றுமதி செய்து வருகிறது. விலை குறைவு மட்டும் இந்திய மருந்து நிறுவனங்களில் இருக்கும் மூலப் பொருள் தட்டுப்பாடு ஆகியவற்றை பூர்த்தி செய்ய சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீனாவுக்கு அருகில் இருக்கும் துறைமுகம் என்பதால் அங்கிருந்து வரும் பெரும்பாலான மருந்துகள் சென்னையில் தான வந்திறங்குகின்றன. அங்கிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வழியாக இந்தியாவுக்குள்ளும் போலி மருந்துகளை சீனா அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் சென்னையில் துறைமுக பணியில் இருக்கும் துணை மருந்து கண்காணிப்பாளர் சாந்தி குணசேகரன் என்பவர் மூன்று போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை துறை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருந்துகளை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் மத்திய அரசின் சோதனை கூடத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து என்வீ டிரக்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு பொறுப்பாளர் ராகேஷ் ஜெயின் கூறுகையில், எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த மருந்து பொருட்கள் எங்களது பெயருக்கு தான் வந்திருக்கிறது என்றாலும், அதை நாங்கள் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. ஒரு மும்பை நிறுவனத்தின் மூலம் தான் பெறுகிறோம். எங்களுக்கு சீன ஏற்றுமதியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் எங்கள் மீது எந்த குற்றமுமி்ல்லை என்றார் அவர்.
ஷீதல் பார்மா நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் ஷா கூறுகையில், இந்த மருந்துகள் இந்தியா மற்றும் சீன துறைமுகங்களில் சோதனையிட்ட பின்னர் தான் வருகிறது. ஆனால் அதையும் மீறி எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றார்.
இது குறித்து குஜராத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் ஒருவர் கூறுகையி்ல், மருந்து பொருட்களை சிறு தொழிலாக செய்து வரும் நிறுவனங்கள் எதுவும் நேரிடையாக இறக்குமதி செய்வதில்லை. நாங்கள் மும்பையில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறோம். அவர்கள் கொடுக்கும் மூலப்பொருட்களை கொண்டு நாங்கள் மருந்து தயாரிக்கிறோம். அவர்கள் கொடுப்பது போலியாக இருந்தால் பல மருந்து நிறுவனங்களும் போலி மருந்துகளை தயாரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்றார்.