விழாவில் தீக்குண்டம் இறங்கிய பாட்டி பலி
வேலூர்: வேலூர் அருகே கோயில் விழாவில் தீக்குண்டம் இறங்கிய மூதாட்டி உடல் கருகி பரிதாமாக பலியானார்.
வேலூர் தாலுகா அப்புக்கல் குடிசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மனைவி தஞ்சம்மாள் (60). இவர்களது திருமணமான பேத்தி ஒருவர் கர்ப்பமாக இருந்தார்.
அவருக்கு அது தலைபிரசவம் என்பதால் அது நல்லபடியாக நடந்தால் நேர்த்திக் கடனாக நீதி மாரியம்மன் கோயில் விழாவில் தீக்குண்டம் இறங்குவதாக தஞ்சம்மாள் வேண்டிக் கொண்டார்.
அதேபோல் பேத்திக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதனால் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற தஞ்சம்மாள் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 7 -ம் தேதி நீதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அந்த திருவிழாவில் வழக்கம் போல் தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் நேர்த்திக் கடனை நிறைவேற்ற தீக்குண்டம் இறங்கினர்.
அதேபோல் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற தஞ்சம்மாளும் தீக்குண்டம் இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குண்டத்தில் தவறி விழுந்து விட்டார். இதில் அவரது உடல் கருகியது.
உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.