ராகுல் பிறந்த நாள்-மு.க. ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 39வது பிறந்த நாளையொட்டி அவருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், நீங்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன். இந்திய இளைஞர்கள் அறிவும், திறமையும் வாய்ந்தவர்கள். தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காக அப்படிப்பட்ட இளைஞர் சக்தியை நீங்கள் வழி நடத்தி செல்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது குறிக்கோள் நிச்சயம் நிறைவேறும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் நீங்கள் நீண்ட நாள் மகிழ்ச்சிகரமாக வாழ மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு திமுக பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்..
ராகுல் காந்தியின் பிறந்த தின விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு 39 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டினார். இதில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணைத் தலைவர் யசோதா, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், எம்எல்ஏ காயத்திரி தேவி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இலவச இதய பரிசோதனை முகாம் மற்றும் ரத்த பரிசோதனை முகாம்களை தங்கபாலு துவக்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
ராகுல் காந்தி பிறந்தநாளை மத நல்லிணக்க நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். தாழ்த்தப்பட்டோருடன் சமபந்தி விருந்தும் தமிழகம் முழுவதும் இன்று சுமார் 1,000 இடங்களில் நடைபெறுகிறது.
மத்தியில் காங்கிரஸ் தனித்து நல்லாட்சி அமைய வேண்டும். அதே போல் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் விருப்பம்.
ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் 2011ல் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்றார்.