கர்ப்பிணியை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிக் கொன்ற கொடூர போலீஸார் கைது
லக்னோ: டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர் என்பதற்காக, கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டு கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் உ.பி. ரயில்வே போலீஸார். இதில் அப்பெண் இறந்தார். இதுதொடர்பாக 2 போலீஸார் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
உ.பி. மாநிலம் மஜ்ராப்புரப் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் லோத். இவரது மனைவி கவிதா. இவர் கர்ப்பமாக இருந்தார். லோத் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் மைலானி - கோண்டா இடையிலான பாசஞ்சர் ரயிலில் பயணிப்பதற்காக திகுனியா ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு ரயில் பெட்டியில் தனது சைக்கிளை கயிறு போட்டுக் கட்டிக் கொண்டார். பின்னர் மனைவி, மகளுடன் ரயிலில் ஏறி அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டதும் அங்கு வந்த இரு போலீஸார், சைக்கிளை ரயிலில் கொண்டு செல்வதாக இருந்தால், ரூ. 100 தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய கவிதா 5 ரூபாய் தாளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நீட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இரு போலீஸாரும், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், கவிதாவை ஓடும் ரயிலிலிருந்து பிடித்துத் தூக்கிப் போட்டு விட்டனர். அவரது மகளையும் தூக்கி வீசி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது.
இந்த சம்பவம் கவிதாவின் உறவினர்களுக்குப் போகவே அவர்கள் திரண்டு வந்தனர். திகுனியா ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், கவிதாவைக் கீழே தள்ளிக் கொன்ற இரு கான்ஸ்டபிள்களையும் சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் இரு போலீஸாரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இரு போலீஸாரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications