பாளையில் 33 சித்த மாணவர்கள் சஸ்பெண்ட் - மற்ற மாணவர்கள் தொடர் போராட்டம்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட 33 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து சஸ்பெண்ட் ஆகாத மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளதால் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவை இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மூலிகைப் பிரிவில், பணியாற்றி வந்த 4 ஊழியர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு சேலத்தில் பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மூலிகை ஆராய்ச்சிப் பிரிவை மேட்டூருக்கு மாற்றவும் அங்கு உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும்வரை தற்காலிகமாக சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு மாற்றவும் மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதை எதிர்த்து, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து 33 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொறுப்பை வகிக்கும் டாக்டர் செளந்தரராஜன் கூறுகையில், சஸ்பெண்ட் உத்தரவை மாணவர்கள் பெற மறுத்ததால், பெயரை மட்டும் வாசித்துவிட்டு உத்தரவின் நகல் கல்லூரியின் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டது.
மாணவர்களின் கோரிக்கைக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை. மாணவர்கள் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி வருவதால், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்படாத 28 மாணவிகள் உள்பட 40 பேர் தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சஸ்பெண்ட் ஆன மாணவர்களும் கல்லூரிக்கு வெளியில் குழுமியுள்ளனர். இதனால் பாளைய கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications