வணங்கா மண் கப்பல் ஊழியர்களில் சிலருக்கு உடல் நலம் பாதிப்பு
இதையடுத்து வணங்கா மண் கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டால் உடனடியாக செய்ய சென்னை துறைமுகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு இக்கப்பல் வந்தபோது கப்பலை உள்ளே நுழைய விடாமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டது இலங்கை அரசு.
இதனால் எங்கு போவது என்று தெரியாமல் வணங்கா மண் கப்பல் சென்னைக்கு அருகே 18 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இக்கப்பலில் 13 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உடல் நலம் தற்போது மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமான குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காததால் கப்பல் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இருவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் முன்பு இடம் பெற்றிருந்தவர்கள்.
கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை சென்னையில் இறக்குவதற்காக தற்போது கப்பல் காத்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் கப்பல் ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.