கச்சத்தீவு மீட்பு: அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் - வீரமணி
தென்காசி: கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
குற்றாலம் வந்த வீரமணி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சத்தீவை மீட்க அனைத்து கட்சியினர் ஆதரவு தந்தால் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தயார் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனை திராவிடர் கழகம் வரவேற்கிறது.
கச்சத் தீவை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழகத்தை வஞ்சிக்கும் முல்லை பெரியாறு, பாலாறு, காவேரி விவகாரங்களில் இங்கு உள்ள அரசியல் கட்சிகள் ஒரே கருத்தை வலியுறுத்தவில்லை.
ஆந்திரா, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அவர்கள் மாநில பிரச்சனைகளில் ஒருமித்து குரல் எழுப்புகின்றனர். கச்ச தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மூத்த திமுக தொண்டர்களுக்கு நினைவு பரிசும், 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற செங்கோட்டை வட்டார மாணவ, மாணவிகளுக்கு கலைஞர் தமிழ்சங்கம் சார்பில் பரிசுகள், சான்றுகள் வழங்கி பேசினார்.