பெனசிர் கொலை-ஜூலை 1ல் ஐ.நா விசாரணை துவக்கம்
ஐ.நா: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் தனியாக கமிஷன் ஒன்றை அமைத்து வரும் ஜூலை 1ம் தேதி முதல் விசாரணையை துவக்கவிருப்பதாக ஐ.நா தெரிவி்த்துள்ளது.
ராவல்பிண்டி நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தேர்தல் பிரச்சார கூ்ட்டத்தின் போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. மேலும், தலிபான் தளபதி பைதுல்லா மசூத்துக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரை தேடி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. இந்த கொலை வழக்கை விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்று ஐ.நாவும் தற்போது விசாரணைக் கமிஷனை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா பொது செயலாளர் பான் கி மூன், பாகிஸ்தான் அதிபரும், பெனசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜூலை 1ம் தேதி முதல் விசாரணை தொடங்கி 6 மாதத்தில் முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் குறித்து ஐநா செய்தி தொடர்பாளர் மைக்கேல் மோன்டாஸ் கூறுகையில்,
ஐ.நா கமிஷன் இந்த கொலை வழக்கில் பாகிஸ்தானுக்கு துப்பு துலக்க உதவிகரமாக இருக்கும். இந்த கமிஷனின் தலைவராக சிலி நாட்டுக்கான ஐ.நா தூதர் ஹெரால்டோ முனோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 6 மாதம் பதவி வகிப்பார்.
இவரை தவிர்த்து இந்தோனேசியா முன்னாள் அட்டார்னி ஜெனரல் மர்சூகி தருஸ்மேன், அயர்லாந்து முன்னாள் போலீஸ் தலைவர் பீட்டர் பிட்ஸ்ஜெரால்டு ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு தான் இருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications